சென்னை: தமிழகத்தில் கொரோனா இறப்பு குறைவாகவே உள்ளது இன்னும் 3 நாளில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விவரம் தெரிய வரும் என மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 1 லட்சத்து 51 ஆயிரத்து 217 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 30 ஆயிரத்து 215 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இதுவரை 31,64,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  37,264 பேர் உயிர் இழந்துள்ளனர். அதே வேளையில் தொற்று பாதிப்பில் இருந்து  29,20,457 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,06,484 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில், இன்று மொழிப்போர் தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்ர். அபோது,   தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை, குறைவாகவே உள்ளது என்று கூறியவர், ஒமிக்ரான் மற்றும்  டெல்டா வகை தொற்றால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை குறைவு என்றார். மேலும் மாநிலத்தில் கொரோனா  தொற்று தொடர்ந்து குறையும் பட்சத்தில் ஊரடங்கு தேவையில்லை என்று தெரிவித்தவர்,  பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பியுள்ள நிலையில், சென்னையில் அடுத்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலைமை தெரியவரும் என்றும் குறிப்பிட்டார்.