கள்ளக்குறிச்சி:  கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தவற்காக தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கள்ளக்குறிச்சி செல்ல உள்ளதாக கூறப்படு கிறது. இதையொட்டி, கள்ளிக்குறிச்சியில்  முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அவ்வப்போது  மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த மாதம் கோவை, சேலம், ஈரோடு உள்பட பல மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கியும் வைத்தார். அதுபோல கடந்த 3 நாட்களாக தென் மாவட்டங்களில் ஆய்வு நடத்தினார். இதையடுத்து, இன்று சேலத்திற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா குறித்த ஆய்வு செய்வதற்காக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் அலுவலர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அப்போது. பல்வேறு  நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் கிரண் குராலா, கள்ளக்குறிச்சி மாவட்ட அண்ணா தி.மு.க. செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அரசு அதிகாரிகளுக்கு நிகழ்ச்சி முன்னேற்பாடுகள், பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினர்.