ராஜ்கோட்

குஜராத் மாநிலத்தில் மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அம்மாநில செய்தித் தாள்களில் பெரும்பகுதி இரங்கல் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன.

 

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தொற்றால் பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.   குறிப்பாக  இந்த கால கட்டத்தில் கொரோனாவால் மரணம் அடைவோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது.  இதில் பெரும்பாலானவை கொரோனா மரணம் எனக் குறிப்பிடப்படுவதில்லை.

குஜராத் மாநிலத்தில் தினசரி மரண எண்ணிக்கை 120க்கும் மேல் காணப்படுகின்றன.   ஆயினும்  இதை விட அதிகமான கொரோனா மரணங்கள் மாநிலத்தில் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.   கொரொனாவுடன் இணை நோய் இருந்து மரணம் அடைவோருக்கு இணை நோயால் மரணம் என சான்றிதழ் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில் புகழ்பெற்ற செய்தித் தாளான சந்தேஷ் செய்தித்தாளின் ராஜ் கோட் பதிப்பில் மொத்தமுள்ள 20 பக்ககங்களில் 6.5 பக்கங்களில் முழுவதுமாக இரங்கல் விளம்பரங்களே இடம் பெற்றுள்ளன.   இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவற்றில் தொலைப்பேசி மூலம் மட்டும் தொடர்பு கொள்ளவும் என்னும் வாசகங்கள் இடம் பெற்று தற்போதைய நிலையை நினைவு படுத்துகிறது.