சென்னை: கொரோனவால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலைக்கு சென்ற, தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,  கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார். சுமார் ஒரு மாத கால சிகிச்சைக்கு பிறகு  இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

அமைச்சர் காமராஜ் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு,  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜனவரி மாதம் 5ந்தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இடையில் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், அங்கிருந்து மாற்றப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலை தேறி வந்தது. சமீபத்தில், அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று முழுமையாக குணமடைந்து உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மேலும், அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மாத காலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது குணமடைந்துள்ளார் அமைச்சர் காமராஜ்.