டெல்லி: 57 நாட்களில் 1 லட்சத்தை எட்டிய கொரோனா தொற்று எண்ணிக்கை, 7 நாளில் 1.50 லட்சத்தை எட்டி அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு உள்ளன.
தொடக்கத்தில் அதன் தாக்கம் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,50,259 ஆகும்.
குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 63,465 ஆகும். ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்கள் 4307. ஆனால் கடந்த கொரோனா பரவல் பற்றிய புள்ளி விவரங்களை கையாண்டு வரும் மருத்துவர்கள் சற்றே அதிர்ந்து  போய் உள்ளனர்.
அதாவது, மே 19ம் தேதி இந்தியாவில் கொரோன தொற்று உடையவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியது. இந்த எண்ணிக்கையை தொடுவதற்கு 57 நாட்கள் பிடித்தது. ஆனால் இப்போது, 1.50 லட்சத்தை எட்ட வெறும் 7 நாட்களே ஆனது.
50 ஆயிரம் நோயாளிகள் 7 நாட்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதையே இது காட்டுவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.