விஜயவாடா

ந்திர மாநிலம் 1 லட்சம் கொரோனா சோதனைக் கருவிகளைத் தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.  மகாராஷ்டிர மாநிலத்தில் மிக அதிக அளவில் பாதிப்பு உள்ளது.  ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 572 ஆகி உள்ளது.

எனவே கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆந்திர அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.  எனவே கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.  அதற்காக ஆந்திர அரசு தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் துரித சோதனை கருவிகளை இறக்குமதி செய்கிறது.  இந்த ஒரு லட்சம் கருவிகள் சிறப்பு விமானம் மூலம் வர உள்ளது.

ஆந்திர மாநில முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி,”இந்த துரித சோதனை கருவிகள் 10 நிமிடங்களில் முடிவைத் தெரிவிக்கும்.  இந்த கருவிகள் தென் கொரிய நாட்டின் எஸ்டி பயோசென்சார் நிறுவனத்தின் தயாரிப்பாகும்.  இந்த கருவிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.  இந்த கருவிகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் ஒப்புதலைப் பெற்றுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த துரித சோதனைக் கருவிகள் இன்னும் 3 அல்லது நான்கு தினங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வந்து சேரும் என அம்மாநில சுகாதார செயலர் ஜவகர் ரெட்டி தெரிவித்துள்ளார்