சென்னை: சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.15 உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே ரூ. 900.50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று  திடீரென மேலும் ரூ.15 விலை உயர்த்தப்பட்டு இருப்பது சாமானிய மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதுபோல சமையல் எரிவாயு விலை  15நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது, திடீரென இன்று  வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு, ‘சிலிண்டர்’ விலை, 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில்,  சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என  தெரிவித்து உள்ளது. இது இல்லத்தரசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சிலிண்டர் விலை ரூ.900.50 காசாக இருந்து வந்த நிலையில், இன்று மேலும் ரூ.15 அதிகரிக்கப்பட்டு ரூ.915.50  ஆக அதிகரித்துள்ளது.

14.2 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி 610 ரூபாயாக இருந்தது. அதன்பிறகு, படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.15 உயர்த்தப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் சிலிண்டர் விலை ரூ.915க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் கடந்த 1ம் தேதி உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு சிலிண்டரும் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.