சென்னை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

சென்னை நகரம் கடந்த சில நாட்களாக வெப்பத்தைச் சந்தித்து வருகிறது.  எனவே மக்கள் பாதிப்பு அடைந்தனர்.  இந்நிலையில் அவர்களுக்குக் கிடைத்த வரம் போல் நேற்று மாலை மழை தொடங்கியது.  பிறகு இரவு முழுவதும் மழை பெய்துள்ளது.  இந்த மழை சென்னை மற்றும் புறநகர் வாசிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

சென்னையில் எழும்பூர், அமைந்தகரை, சேத்துப்பட்டு, அண்ணா சாலை, ஈக்காட்டுதாங்கல், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது. மேலும் வளரவாக்கம், போரூர், ராமாபுரம், மதுவராயில், முகப்பேர், திருவேற்காடு போன்ற இடங்களிலும் பெருமழை பெய்தது. ஓரிரு இடங்களில் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதைப் போல் புறநகர்ப் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.  தவிர தாம்பரம், வண்டலூர், காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடுமையான காற்றுடன் கனமழை பொழிந்துள்ளது.