டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில்,தொகுதி மறுசீரமைப்பு உள்பட சில மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகின்றனர்.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 16 முதல் 18, 2026 வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக உயர்த்தப் பரிந்துரைக்கும், ‘அரசியலமைப்பு (131-வது திருத்தச்) சட்ட மசோதா, 2026’-ஐ விவாதிப்பதே இக்கூட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

மேலும்,  பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதை இக்கூட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

அதாவது,  அரசியலமைப்பு சட்ட திருத்தம், பெண்களுக்கான இடஒதுக்கீடு  மற்றும் தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக் களை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடருக்காக மோடி அரசு கொண்டுவந்துள்ள மசோதாக்கள், தாம் அளித்துவரும் வாக்குறுதிகள் எனக் கூறப்படும் அத்தனைக்கும் முரணாக இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், இந்த விஷயத்தில், பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களை தவறாக வழி நடத்துவதாகவும், “வேண்டுமென்றே வஞ்சகத்தில்” ஈடுபடுவதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு முன்னதாக விநியோகிக்கப்பட்ட இந்த சட்ட வரைவு, குறிப்பாக மாநிலங்கள் முழுவதும் மக்களவை பிரதிநிதித்துவத்தை சீராக அதிகரிப்பது குறித்து அரசு முன்பு அளித்த வாக்குறுதிகளுக்கு முரணாக உள்ளது என்றும்,  இந்த முன்மொழிவுகள் தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் வடமேற்கு, கிழக்கில் உள்ள சிறிய மாநிலங்களின் அரசியல் பலத்தைக் குறைக்கும் என்று  குற்றம் சாட்டி உள்ளார்.

நியாயமான பிரதிநிதித்துவம் குறித்த பிரதமரின் வாக்குறுதிகளை இனி நம்ப முடியாது என்றும் அவர் வாதிட்டார். இதுதொடர்பான, அவரது 10வது பதிவில் , “பிரதமர் ஒரு ‘தலைவர்’ என்று சொல்லப்படுபவர். மக்களைத் தவறாக வழிநடத்தும் அவரது இணையற்ற திறனே அவரது ஒரே தனிச்சிறப்பு. அவர் தவறுதலாகக் கூட உண்மையைப் பேச முடியாத ஒரு பழக்கமான பொய்யர். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அவர் தேசத்தை வேண்டுமென்றே வஞ்சித்திருக்கிறார்,” என்று கூறியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தென்மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இந்த நிலையில்,  இந்த மசோதாக்கள் குறித்து  விவாதிக்க எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

[youtube-feed feed=1]