கொல்கத்தா

மேற்கு வங்க மாநில சட்டசபையை ஆளுநர் முடக்கியதற்கும் அம்மாநில உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

திருணாமுல் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி தலைமையில்; மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சி நடத்தி வருகிறது.  மேற்கு வங்க மாநில ஆளுநராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது முதல், அவருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே நிர்வாகம் மற்றும் அரசியல் ரீதியாகக் கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.  இவர்களின் மோதலின் உச்சக்கட்டமாகக் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆளுநர் ஜக்தீப் தன்கரை மம்தா பானர்ஜி டுவிட்டரில் பிளாக் செய்தார்.

மாநிலங்களவையில்  திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகேந்து சேகர் ராய், மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரை திரும்பப் பெற வலியுறுத்தி, தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்தார்.  இப்படி, ஆளுநருக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்துவரும் சூழலில்  திடீர் திருப்பமாக மேற்குவங்க சட்டப்பேரவையை முடக்கி, ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார்.

அவர் இது குறித்து வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘அரசியலமைப்பு சட்டத்தின், 174வது பிரிவு வாயிலாக எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மேற்குவங்க சட்டப்பேரவையை பிப். 12 (நேற்று) முதல் முடக்கி வைக்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.   அதே வேளையில் அரசியல் நோக்கர்கள் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால், சட்டப் பேரவை கூட்டம் முடக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

இது குறித்து ஒரு சிலர் மாநில அரசின் பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநர் சட்டப் பேரவையை முடக்கி உத்தரவிட்டதாக கூறுகின்றனர்.. மற்றொரு தரப்பினர் திரிணாமுல் கட்சிக்குள் நடக்கும் குழப்பத்தால், அரசுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மாநில அரசின் பரிந்துரை அடிப்படையில்தான், ஆளுநர் சட்டப்பேரவையை முடக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.