புதுடெல்லி:
ஜூலை 26ல் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி விசாரணைக்கு ஆஜரான சோனியாகாந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் உடல்நிலை காரணமாக அவசாகம் கேட்டதால், ஜூன் 23-ந்தேதி ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் விசாரணைக்கு ஆஜராகாமல் மேலும் அவகாசம் கோரியிருந்தார்.

தற்போது சோனியா கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்ட நிலையில், கடந்த 21-ஆம் தேதி சோனியாகாந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 2 மணி நேரம் மட்டுமே அவரிடம் விசாரணை நடைபெற்றது.

இதையடுத்து, மீண்டும் ஜூலை 26ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 26ல் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.