டில்லி

காங்கிரஸ் கட்சி காரியக் கமிட்டி கூட்டம் நாளை கூடி ராகுல் தலைவர் ஆவது குறித்து முடிவெடுக்க உள்ளது.

டில்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் நாளை திங்கட்கிழமை அன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது.   இந்த காரிய கமிட்டி உயர்முடிவுகளை எடுக்க அதிகாரம் பொருந்தியதாகும்.   நாளை காலை 10.30 மணிக்கு நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் அடுத்த காங்கிரஸ் தலைவர் பற்றி விவாதிக்க உள்ளதாக தெரிய வருகிறது.

அடுத்த காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான தேதி இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.   தற்போது காங்கிரஸ் துணைத்தலைவராக இருக்கும் ராகுல் காந்தி ஒருவர் மட்டுமே தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளார் என சொல்லப்படுகிறது.    எனவே அவர் வேட்பாளர் ஆக அறிவிக்கப்பட்டால் போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப் படுவது நிச்சயமே/

வழக்கமாக கட்சித் தலைவர் தேர்தலுக்கு காரியக் கமிட்டி கூட்டத்தை கூட்டி ஒப்புதல் வாங்குவது நடைமுறையில் இல்லை.   ஆனால் சோனியா காந்தி கட்சித் தலைவர் தேர்தல் காரியக் கமிட்டியின் ஒப்புதல் உடன் நடக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளார்.   அதனால் நாளை காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது.