புதுடெல்லி:
தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்களை ராகுல் காந்தி இன்று சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை தெலுங்கானாவில் உள்ள கட்சித் தலைவர்களை சந்தித்து, மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை செய்வதுடன், நிலவும் அரசியல் சூழல் குறித்தும் விவாதிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனையில், நெல் கொள்முதல் விவகாரம் தொடர்பான விவாதமும் கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும்.

கட்சியின் மூத்த தலைவர்களுடனான இந்த சந்திப்பு ராகுல் காந்தியின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த 7 நாட்களில் தெலுங்கானா கட்சித் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்தும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும். மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தனது தேசிய கூட்டணியை வளர்த்துக்கொண்டு, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அல்லாத மற்றும் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை அமைக்க கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் நேரத்தில் இந்த சந்திப்பு நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.