டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அவர் கடந்த அக்டோபர் 1ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தொற்று ஏற்பட்டவுடன் குருகிரமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் அகமது படேல்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந் நிலையில், அகமது படேல் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக மருத்துவமனை கூறி உள்ளது. அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

அகமது படேல் விரைவில் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.இது குறித்து அகமது படேல் மகன் பைசல் கூறி இருப்பதாவது:

அகமது படேலுக்கு கடந்த அக்டோபர் 1ம் தேதி கொரோனா இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. இப்போது அவர், மெதந்தா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை தரப்படுகிறது.

அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து மருத்துவ கவனிப்பில் இருக்கிறார், அவர் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறி உள்ளார்.