டில்லி

உபி மாநிலம் லக்கிம்பூரில் நடந்த வன்முறை குறித்து 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க கோரி காங்கிரஸ் கட்சி குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளது.

மத்திய அமைச்சருக்குக் கருப்புக் கொடி காட்டக் கூடியிருந்த விவசாயிகள்  மீது காரை ஏற்றி 4 விவசாயிகள் கொல்லப்பட்ட நிகழ்வு நாடெங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த காரில் இருந்ததாகச் சொல்லப்பட்ட மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.  அவருக்கு ஜாமீன் அளிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

நேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத் மற்றும் ஏகே அந்தோணி உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.  ஜனாதிபதி மாளிகையில்  நடந்த இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் ஒரு மனுவை அளித்துள்ளனர்.

அந்த மனுவில்,  ” உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆதரவு இருக்கிறது என்ற துணிச்சல் காரணமாக, கடந்த 3ம் தேதி பட்டப்பகலில் விவசாயிகளை உள்துறை இணை அமைச்சரின் மகன் கார் ஏற்றிக் கொன்றுள்ளார்.  இதனால் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களைப் போல், நீங்களும் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள் என நம்புகிறோம்.

புதிய வேளாண் சட்டங்கள் தங்களைப் பாதிக்கும் என அறிந்து கொண்டுள்ள விவசாயிகள், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மழை, குளிர், வெயில் என அனைத்தையும் தாங்கிக் கொண்டு டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆயிரம் விவசாயிகளுக்கு மேல் உயிரிழந்தும், தங்களின் போராட்டம் ‘காந்தி வழியிலே’ என இன்று வரையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு அவர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கவில்லை என்பது வேதனையாக உள்ளது.  விவசாயிகள் நாடு தழுவிய போராட்டம் அறிவித்த போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் பேசிய வீடியோக்கள் இன்றளவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. எனவே கடந்த 3ம் தேதி லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டது திட்டமிட்ட ஒன்றே என்பது நிரூபணமாகி உள்ளது.

அமைச்சரின் பெயரில் உள்ள கார்களே விவசாயிகள் மீது மோதியதும், காருக்குள் அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததையும் பலர் நேரில் கண்டுள்ளனர். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு உபி காவல்துறை வழக்குப் பதிவு செய்து இருந்தாலும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்பதை ஆராய வேண்டும்.

அவர் பதவியில் தொடர்ந்து நீடித்தால் அதனை ஆராய்வது கடினம்.  காவல்துறையினர் உள்துறை அமைச்சரைச் சாதாரண குற்றவாளியை எந்த போலீசார் விசாரிக்கத் துணிவார்கள்?  ஆகவே ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவியில் இருக்கும் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பான விசாரணை முறையாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என்றால், உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் தலைமையில் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும்.” என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்கு பிறகு ராகுல் காந்தி உள்ளிட்டோர், ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே கூட்டாக அளித்த பேட்டியில், ‘‘லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியைச்  சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவியில் நீடித்தால் விசாரணை முழுமையாகவும், முறையாகவும் நடைபெறாது என்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம். அரசுடன் இது குறித்து ஆலோசிப்பதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார்,’ என்றனர்.