மும்பை: ஊரடங்கு நடவடிக்கைகளால், புலம்பெயர் தொழிலாளர்கள் பலர், தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய நிலையில், தற்போது அவர்களைத் திரும்பவும் அழைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன், வெளிமாநில தொழிலாளர்களை வேலை வாங்கிய நிறுவனங்கள், அவர்களுக்கான எந்தவித முன்னேற்பாட்டையும் மேற்கொள்ளாமல், திடீரென வேலையை நிறுத்தின.

இதனால், கடும் நெருக்கடியை சந்தித்த அத்தொழிலாளர்கள், பல்வேறு நரக வேதனைகளை அனுபவித்து தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பின.

தற்போது, பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் துவங்கியுள்ள சூழலில், பெருநிறுவனங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் தேவைப்படுகின்றனர்.

எனவே, அவர்களை ஈர்ப்பதற்கான பல்வேறு (பாதுகாப்பு, முன்பைவிட அதிக சம்பளம், இதர வசதிகள்) அறிவிப்புகளை வெளியிட்டு, தொழிலாளர்களை மீண்டும் அழைக்கின்றன அந்நிறுவனங்கள். சொந்த ஊர்களில் வேறு வாய்ப்புகள் இல்லாததால், பல தொழிலாளர்கள் மீண்டும் பணியிடங்களுக்குத் திரும்ப ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.