சென்னை:
திருப்பதி வெங்கடாஜலபதி தரிசன டிக்கெட் இன்றுமுதல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கிடைக்கும். இதற்கான ஏற்பாடுகளை ஆந்திர அரசின் போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது.
திருப்பதி செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ஆந்திர அரசு, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆந்திர அரசின் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில், இதற்கான வசதியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 5000 ஸ்பெசல் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
இதன் காரணமாக திருமலையில் பக்தர்கள் தரிசன டிக்கெட் வாங்க காத்திருக்கும் நேரமும், தரிசன நேரமும் குறையும் என தெரிகிறது.
thiurpathi
இதுகுறித்து ஆந்திர அரசு போக்குவரத்து கழக கோயம்பேடு பிரிவு மேலாளர் நவீன்குமார் கூறியது:-
சென்னையிலிருந்து இருந்து திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி செல்லும் ஏ.சி. வசதி உடைய பஸ் டிக்கெட்டுடன் சேர்த்து திருப்பதி திருமலை ஸ்பெஷல் தரிசன டிக்கெட் கிடைக்கும் என்றும், திருப்பதிக்கு பஸ் பயண கட்டணம் ரூ.300ம், அதனுடன் தரிசன கட்டணம் ரூ.300 சேர்த்து ரூ. 600 செலுத்த வேண்டும்.
தினசரி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை  இந்த வசதிகளை பெறலாம். மேலும் விவரங்களுக்கு 90007 68373, 73828 81885 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். www.apsrtconline.in  என்ற இணைய தளத்திலும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.