பதன்கோட்: நாடாளுமன்ற தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் 1 வாரத்திற்குள் வெளியிடப்படும் என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், தலைமையின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக செயல்படும் கட்சிக்காரர்கள் யாராக இருந்தாலும், கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குருதாஸ்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவுள்ளவர், அத்தொகுதியின் தற்போதைய உறுப்பினரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சுனில் ஜக்கார்தான் என்று பஞ்சாப் முதல்வர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரோன்மணி அகாலிதள் கட்சியிலிருந்து விலகிய ஷெர்சிங் குபே, காங்கிரஸில் சேர்ந்திருப்பதால், கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்ற கருத்தை அவர் மறுத்தார்.

கட்சியின் அனைத்து வீரர்களும் கட்டுக்கோப்புடன் இருக்கிறார்கள் மற்றும் யாருக்கு எங்கே சீட் வழங்குவது என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றும், தலைமையின் முடிவுக்கு மாறாக செல்வோர் யாராக இருப்பினும், கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

– மதுரை மாயாண்டி