சென்னை

சென்னையில் பிரதமர் மோடி 44 ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்துள்ளார்

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கோலாகலமாக நடந்தது.   இந்தியாவில் முதல் முறை நடைபெறும் இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.   இதற்காகப் பிரதமர் மோடி சதுரங்க கரை  வேட்டி சட்டையுடன் வந்துள்ளார்.   இந்த விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உரையாற்றினார்.

முதல்வர் மு க ஸ்டாலின்

செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது பெருமை. நேரு விளையாட்டு அரங்கத்திற்குப் பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் விழா அமைந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மிக எழுச்சியோடு நடைபெற்றுள்ளது. பிரதமர் மோடியை அழைக்க டெல்லி செல்லலாம் என திட்டமிட்டிருந்தேன். கொரோனா தொற்றால் என்னால் நேரில் சென்று அழைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்; நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என பிரதமர் உறுதியளித்தார். பிரதமர் மோடிக்குச் சதுரங்க ஆட்டம் மிக பிடித்தமானது என அனைவருக்கும் தெரியும். இந்தியாவுக்குப் பெருமை தரும் நாள் என்பதால் பிரதமர் மோடியைத் தொடங்கி வைக்க அழைக்கப்பட்டது. குஜராத் முதல்வராக இருந்த போது 20,000 வீரர்களுடன் செஸ் போட்டியை நடத்தியவர் பிரதமர் மோடி. வழக்கமாக ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்க 18 மாதங்கள் ஆகும்; தமிழ்நாடு அரசு 4 மாதத்தில் ஏற்பாடு செய்துள்ளது. 4 மாதங்களில் பன்னாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செய்துள்ளது.

தமிழ்நாட்டின் மதிப்பும், பெயரும் இன்று முதல் மேலும் உயரும். இந்தியாவில் உள்ள 73 கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 2018ம் ஆண்டு மிக சிறிய வயதில் கிராண்ட்மாஸ்டராக புகழ்பெற்றவர் பிரக்ஞானந்தா. 36% இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள் தான். கீழடி அகழாய்வில் 2 வகையான ஆட்டக்காய்கள் கிடைத்தது; இதுபோன்ற காய்கள் சதுரங்க ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது ”

என உரையாற்றி உள்ளார்.