ராமநாதபுரம்

முதல்வர் மு க ஸ்டாலின் ராமநாதபுரத்தில் நடந்த திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நிதி  அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்துள்ளார்.

நேற்று தி.மு.க. தென்மண்டலத்தில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் ராமநாதபுரம் பேராவூரில் நடந்தது.  கூட்டத்தில் திமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில்,

”நமக்கு எதிராக அவதூறு, பொய் பிரசாரம் செய்யும் சிறுநரிக்கூட்டம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சமூக ஊடகங்கள் சிறப்பான பரப்புரை களமாக மாறி உள்ளது. எனவே, அனைவரும் சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்க வேண்டும். அதனை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

அ.தி.மு.க., பா.ஜ.க. செய்வதை போல பொய் பிரசாரம் செய்ய வேண்டாம். நமது சாதனைகளை மட்டும் சொன்னால் போதுமானது. நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி முழுமையாக வெற்றி பெற வேண்டும். தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜ.க. நாட்டை சின்னாபின்னமாக்கி விட்டது. மீண்டும் ஒரு முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.

பதவிக்கு வரும் முன் மோடி பல வாக்குறுதிகளை கொடுத்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி கருப்பு பணத்தை ஒழித்து ஆளுக்கு ரூ.15 லட்சம் கொடுத்தார்களா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுத்தாரா?

இதில் ராமநாதபுரத்தில் அவர் போட்டியிட போகிறார் என்கின்றனர். ராமேசுவரத்தை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றுவோம் என்றார். பாதாள சாக்கடை பணிகளை தவிர எதுவும் நடக்கவில்லை. அதையும் அ.தி.மு.க. ஆட்சியில் முழுமையாக செய்யவில்லை.

புயலால் அழிந்து போன ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதை திட்டத்தை கொண்டு வருவோம் என்றார். இதுவரை எதுவும் நடக்கவில்லை. மோடி சுட்ட பல வடைகளில் இந்த வடையும் ஒன்று.

மத்திய அமைச்சராக அருண்ஜெட்லி இருந்தபோது சொன்ன மதுரை எய்ம்ஸ் திட்டம் செங்கலுடன் நின்றுவிட்டது. 9 வருடங்கள் கழித்து தற்போதுதான் டெண்டர் விட்டுள்ளனர். இதுவும் நாடாளுமன்ற தேர்தலுக்கான நாடகமா? என்பது தெரியவில்லை.

பல ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரியை தமிழகத்திடம் இருந்து பெறும் மத்திய அரசுக்கு தனது நிதியில் இருந்து, மதுரையில் எய்ம்ஸ் கட்டித்தர மனமில்லை.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு என்ன பேசினார் என்பதே தெரியாமல் ‘வாட்ஸ்அப்’பில் வந்த வெட்டி ஒட்டப்பட்ட தகவலை அப்படியே நாடாளுமன்றத்தில் பொறுப்பற்ற முறையில் பிரதமர் பேசியுள்ளார்.

திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தியபோது எம்.ஜி.ஆர். தி.மு.க.வில்தான் இருந்தார்.

“அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிடர் உடைமையடா…” என்று வாய் அசைத்து பாடியவர் எம்.ஜி.ஆர். வாட்ஸ்அப்பில் வரும் தகவல்கள் வரலாறு என நம்புவது பிரதமருக்கு அழகல்ல.

சொந்த கட்சியில் ஆளில்லாததால் மாற்றுக்கட்சியினரை வைத்து தி.மு.க.வை விமர்சிக்கிறார். தலைவர் இல்லாமல் வெளியில் இருந்து கடன் வாங்கி கட்சி நடத்த வேண்டிய தேவை தி.மு.க. வுக்கு இல்லை.

இப்போதுதான் சகோதரி கனிமொழி கூறிய சிலப்பதிகாரத்தின் முன்னுரையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் படிக்க தொடங்கி இருப்பார் என்று தெரிகிறது. ஒன்றும் அவசரம் இல்லை. முழுமையாக படிக்க காலஅவகாசம் உண்டு.

மத்திய நிதி மந்திரியின் கணவர் எழுதிய புத்தகத்தை மத்திய மந்திரிகள் அனைவரும் படிக்க வேண்டும். அந்த புத்தகத்தில், மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை காப்பாற்ற முடியாது என கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் சட்டமன்ற நாடகத்துக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் மத்திய நிதி மந்திரி, மணிப்பூர் சம்பவத்துக்கு ஏன் பதில் அளிக்க மறுக்கிறார்?

ஒன்றரை மணி நேரம் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமருக்கு மணிப்பூர் ஞாபகத்துக்கு வரவில்லை. ஓரிரு வரியில் மணிப்பூரை கடந்து சென்றார்.

மக்கள் நலனில் அக்கறையில்லாத பிரதமர், உள்துறை மந்திரி தி.மு.க.வை விமர்சிக்கின்றனர். தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடிமையாக இருப்பது எடப்பாடி பழனிசாமிதான். நாங்கள் மாநில கட்சிதான். ஆனால் அனைத்து மாநில மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி தி.மு.க.தான்.

மக்கள் உரிமைகளை ஓங்கி ஒலித்து, நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் குரல் கொடுத்து வருகின்றனர். நம்மை பின்பற்றி பிற மாநில எம்.பி.க்களும் தைரியமாக பேசுவது மத்திய அரசுக்கு கோபத்தை உண்டு பண்ணுகிறது. மக்களாட்சிக்கு தமிழகம் முன்னோடியாக இருந்து 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்”

என்று கூறி உள்ளார்.