டாவோஸ்:

காஷ்மீர் பிரச்சினையை  அமெரிக்கா கூர்ந்து  கண்காணித்து வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். முன்னதாக டிரம்புடன் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் சந்தித்து பேசிய நிலையில், டிரம்ப் இந்த கருத்தை வெளியிட்டு உள்ளார்.

ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை, இதில் மற்ற நாடு தலையிட தேவை யில்லை என்று இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், டிரம்ப் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையில் மூக்கை நுழைத்துள்ளார்.

உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்கா, பாகிஸ்தான் உள்பட கூட்டமைப்பை ச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பாகிஸ்தான் அதிபர், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார்.

அப்போது,  இரு நாடுகளுக்கு இடையே உள்ள  உறவுகள் மற்றும் இந்தியாவின்  காஷ்மீர் பிரச்சினை குறித்து இம்ரான்கான் டிரம்பிடம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டிரம்ப்,  இந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க தான் தயாராக இருப்பதாகவும்,  ‘காஷ்மீரைப் பற்றியும், பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே என்ன நடக்கிறது என்பது பற்றியும் இருவரும் பேசியதாக தெரிவித்தவர்,  எங்களால் உதவ முடிந்தால், நாங்கள் நிச்சயமாக உதவுவோம். இரு நாடுகளுடையிலான காஷ்மீர்  பிரச்சினையை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருகிறது’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய இம்ரான்கான்,  ‘இந்தியாவுடனான பிரச்சினையை வேறு எந்த நாட்டினாலும் தீர்க்க முடியாது என்பதால், அமெரிக்காவை நாடுவதாகவும், இந்த பிரச்சினையை தீர்ப்பதில் அமெரிக்கா பங்கு வகிக்கும் என்று நாங்கள் இப்போதும் நம்புகிறோம்’ என தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 370 வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370ஐ  இந்திய அரசு ரத்து செய்தது. அதைத்தொடர்ந்து, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பல முறை வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாடு மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது 4வது முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் காஷ்மீர் பிரச்சினை தலையிட ஆர்வம் காட்டி உள்ளார்.