ஜெய்பூர்:

ரேசன் கடையில் பொருள் வாங்க இந்திய குடிமகனாக இருந்தாலோ, ரேசன் கார்டு வைத்திருந்தாலோ மட்டும் போதாது, மேலும் ஒரு தகுதி வேண்டும் என்பது ராஜஸ்தானில் நடைமுறையில் உள்ளது. அது என்ன என்றால் மரம் ஏற தெரிந்திருக்க வேண்டும். மரம் ஏற தெரியாதவர்களுக்கு ரேசன் பொருள் கிடைக்காது….

அதை பற்றி இங்கே பார்ப்போம்……

டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி இந்தியா பயணித்து கொண்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக ரேசன் பொருள் விநியோகமும் டிஜிட்டல் முறைக்கு மாற்றம் செய்யப்படுகிறது. ஆதார் எண்ணுடன் ரேசன் கார்டு இணைக்கப்பட்டிருப்பதால் கைரேகை பதிவு செய்து தான் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த திட்டம் மிகவும் பின் தங்கிய மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டள்ளது. அந்த மாநிலங்களில் உள்ள மக்கள் இதனால் தினமும் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த வரிசையில் சேர்க்கப்பட்டதில் ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூர் ம £வட்டத்தில் கோத்ரா பகுதியும் ஒன்று.

இந்த பகுதியில் மட்டும் 76 ரேசன் கடைகள் உள்ளது. இதில் 13 ரேசன் கடைகள் மிகவும் ஏழைகள் நிறைந்த பகுதி. இந்த ப குதிகளில் உள்ள ரேசன் கடை ஊழியர்கள் டிஜிட்டல் இயந்திரத்துடன் மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொள்கின்றனர். ஏன் என்றால், அங்கு அந்த இயந்திரத்தை வைத்தால் தான் இன்டர்நெட் சேவை கிடைக்கிறதாம். இதனால் பெண்களும், ஆண்களும் தினமும் மரத்தின் மீது ஏறி தங்களது பயோ மெட்ரிக் தகவல்களை அதாவது கைவிரல் ரேகையை பதிவு செய்கின்றனர்.

பின்னர் அங்கிருந்து பல மைல் தூரம் நடந்து சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து ரேசன் கடையில் பொருட்களை வாங்கி செல்கின்றனர். மெர்பூர், சிபர்வாதி, மால்வியா காக்கரியா, பீப்லா, புரிதிபார், பெரன், பைச்சா, உமரியா, சமோலி ஆகிய பகுதி ம க்கள் தினமும் பல மணி நேரம் காத்திருந்து பயோ மெட்ரிக் தகவல்களை பதிவு செய்து சர்க்கரை, கெரசின் போன்ற பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்து போலா கெமதி என்பவர் கூறுகையில்,‘‘ எங்களது வீட்டில் இருந்து பல மைல் தூரத்தில் ரேசன் கடை உள்ளது. ஆனால் ரேசன் கடை ஊழியர்கள் அங்கிருந்து பல மைல் தூரத்தில் உள்ள மலை உச்சியில் முகாமிட்டுள்ளனர். சமயத்தில் இன்டர்நெட் கிடைக்க தாமதம் ஆவதால் 4 முதல் 5 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் பின்பு தான் அந்த இயந்திரம் வேலை செய்கிறது. இதற்கு முன் இருந்த முறை தான் சிறந்தது’’ என்றார்.
‘‘பல வீடுகளின் மின்சார இணைப்பு இல்லை. சாலைகள் சரியாக இல்லை. சுகாதார வசதியும் அறவே இல்லை. இந்த நிலையில் எப்படி அரசாங்கம் டிஜிட்டல் முறையில் பொது விநியோக திட்டத்தை அமல்படுத்தலாம். அடிப்படை கட்டமைப்புகளை சரி செய்த பின்னர் தான் இதை அமல்படுத்தியிருக்க வேண்டும்’’ என்று பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறினார்.

‘‘கோத்ராவில் உள்ள பல கிராமங்கள் தொலை தொடர்பு மற்றும் இன்டர்நெட் வசதியே இல்லாமல் உள்ளது. அங்கு நிலவும் மோசமான வளர்ச்சி காரணமாக ரேசன் பொருட்கள் விநியோகம் செய்ய கடினமாக உள்ளது’’ என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசு அதிகாரிகள் மத்தியில் கோத்ரா என்பது தண்டனை பணியிடமாக கருதப்படுகிறது. இங்கு விநியோகம் முற்றிலும் பாதிக்கும். இளைஞர்கள் மட்டுமே அந்த பகுதியில் வசிக்கும் நிலை உருவாகியுள்ளது. முதியவர்கள், இளைஞர்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறும் சூழல் தான் அங்கு உள்ளது.

காராசிஸ் மற்றும் காமெதி இன மலைவாழ் மக்கள் மட்டுமே அங்கு வசிக்கின்றனர். இவர்கள் தான் அங்கு 85 சதவீத மக்கள் தொகை. இவர்கள் மலை பகுதியில் தான் வசிக்கிறார்கள். விவசாயம் தான் இவர்களது பிரதான தொழில்.