டோஹா: ஆசிய தடகளப் போட்டியில், 1500 மீட்டர் பெண்கள் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார் இந்தியாவின் சித்ரா. இது இப்போட்டி தொடரில் இந்தியா பெறும் 3வது தங்கமாகும்.

கடந்த 2018ம் ஆண்டு இவர் இதேப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். ஆனால், தற்போது, இறுதிகட்டத்தில் தனக்கு சவாலாக இருந்த பஹ்ரைன் நாட்டு வீராங்கணையை விரட்டிப் பின்தள்ளி, தங்கத்தைப் பறித்துவிட்டார்.

இதே வீராங்கணைதான் கடந்தாண்டு போட்டியில், சித்ராவை மூன்றாமிடத்திற்கு தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவைச் சேர்ந்த சித்ரா, பந்தய தூரத்தைக் கடப்பதற்கு எடுத்துக்கொண்ட நேரம் 4:14.56.

ஆண்கள் பிரிவு 1500 மீட்டர் ஓட்டத்தில், இந்தியாவின் அஜய்குமார் வெள்ளிப் பதக்கம் பெற்று அசத்தினார். கத்தார் நாட்டின் முசாப் அலியை மூன்றாமிடத்திற்கு தள்ளி, வெள்ளியை தட்டிச்சென்றார் அஜய் குமார்.