பீஜிங்

ப்பான் நாட்டின் புகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் கடலில் திறந்து விடும் திட்டத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி ஜப்பானில் சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்து. மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளைக் குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது.

இதையொட்டி 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் அடைந்து, சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது.  விபத்து நிகழ்ந்து 12 ஆண்டுகள் கடந்தும், அந்த உலையில் இன்னும் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. புகுஷிமா அணு உலையில் உள்ள அணு கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றிவிட்டு அந்த அணுஉலையை முழுமையாகச் செயலிழக்கச் செய்யும் பணிகளில் டெப்கோ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

புகுஷிமா அணு உலையில் அணு கழிவுகள் நிறைந்த சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் டன் கழிவுநீர் முற்றிலுமாக சுத்திகரிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொட்டிகளில் பாதுகாப்பாகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.  இந்த கழிவு நீரைக் கடலில் திறந்துவிடும் திட்டத்தை ஜப்பான் அரசு நீண்டகாலமாகப் பரிசீலித்து வருகிறது.

இந்த திட்டத்துக்கு மீனவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அணு கழிவுகள் அகற்றப்பட்ட கழிவு நீரை கடலில் திறந்துவிடும் திட்டத்துக்கு ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியது.

இத்திட்டத்துக்குச் சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச அணுசக்தி முகமை அளித்த மதிப்பீட்டின் நம்பகத்தன்மை குறித்து சீனா கேள்வி எழுப்பியுள்ளது.  ஆனால் இந்த அணு கழிவுகள் அகற்றப்பட்ட கழிவுநீரைக் கடலில் திறந்துவிடுவதைத் தவிர வேறு பாதுகாப்பான வழிகள் எதுவும் இல்லை என ஜப்பான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.