சிகிச்சை கொடுக்காமல் அலட்சியம்…  சில நிமிடங்களில் குழந்தை பலி…

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதிலிருந்தே மருத்துவமனைகளில் நடந்ததாக வெளிவரும் ஒவ்வொரு செய்தியும் மனதைப் பதற வைக்கின்றது. வைரஸ் பரவும் கடுமையான சூழலில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றன. ஆனாலும் சில மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்காமல் புறக்கணிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.  உத்திரபிரதேசத்தில் நடந்த அந்த மாதிரியான ஒரு சம்பவம் தான் இது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் இருந்து சுமார் 123 கி.மீ தொலைவில் கன்னோஜ் என்ற மாவட்டத்தின் அரசு மருத்துவமனைக்கு, வீங்கிய கழுத்துப் பகுதி மற்றும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தங்களது ஒரு வயதுக் குழந்தையை அழைத்து வந்துள்ளனர் பெற்றோர். ஆனால், மருத்துவர்கள் அவர்களது குழந்தையைத் தொட மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.  குழந்தையை 90 கி.மீ தூரத்தில் உள்ள கான்பூர் சிறப்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வலியுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.  இதனால் செய்வதறியாமல் மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதபடி நின்றுள்ளனர் பெற்றோர்.  இதன்பிறகு வேறு வழியின்றி மருத்துவர்கள் சிகிச்சையளிக்க முன்வந்த போது அந்தக் குழந்தை உயிருடன் இல்லை.  இந்தச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிகிச்சைக்கு வந்திருந்த சிலர் மருத்துவமனை வளாகத்தில் பிரேம்சந்த் மற்றும் ஆஷா தேவி இருவரும் தங்களது குழந்தையுடன் அழும் காட்சியை வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். 12 விநாடிகள் பதிவான அந்த வீடியோவில், பிரேம்சந்த் தனது இறந்த குழந்தையின் உடலைக் கட்டியணைத்து அழுதபடி தரையில் கிடக்கிறார். அவரது மனைவி சில அடிகள் தூரம் தள்ளி அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மற்றொரு வீடியோவும் வெளியானது. அந்த வீடியோ, குழந்தையை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துப் பரிசோதனை செய்வதாகக் காட்டுகிறது.

இதைப்பற்றி பிரேம்சந்த் பேசுகையில், மருத்துவமனைக்கு வந்திருந்த சிலர் செல்போன்களில் படம்பிடிக்கத் தொடங்கிய பின்னரே மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றதாகவும், அதுவரை குழந்தையைத் தொட அவர்கள் தயாராக இல்லையென்றும், அவர்கள் கையில் குழந்தையுடன் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் அங்கேயே காத்திருந்ததாகவும் கூறுகிறார்.

குழந்தையின் தாய் ஆஷா தேவி பேசும்போது, “அவனது கழுத்துப் பகுதி வீங்கி இருந்தது.  நாங்கள் 30 முதல் 40 நிமிடங்கள் அங்கேயே காத்திருந்தோம். அதன்பிறகே அனுமதித்தனர். ஆனால், அதற்குள் அவன் இறந்துவிட்டான்” என்று உடைந்து அழுதுள்ளார்.

மருத்துவர்களின் அலட்சியம்தான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அம்மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இதனை மறுத்துள்ளனர். இதுதொடர்பாக கன்னோஜ் மருத்துவமனையின் உயர் அதிகாரி ராஜேஷ் குமார் மிஸ்ரா பேசுகையில்,”சிறுவன் நேற்று மாலை 4:15 மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டான்.  தீவிர சிகிச்சைப் பிரிவில் அவனை அனுமதித்தோம். அவனது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது.  எனவே குழந்தை மருத்துவ நிபுணர் ஒருவர் சிகிச்சையளிக்க அவசரமாக அழைக்கப்பட்டார். ஆனால், அதற்குள் அவன் இறந்துவிட்டான்.  மருத்துவர்கள் அவனைக் காப்பாற்ற முடிந்தவரை முயற்சி செய்தனர். ஆனாலும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. இதில், எந்தவிதமான அலட்சியமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

– லெட்சுமி பிரியா