சென்னை:
முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக மே 23 ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்லவுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த MITSUBISHI ELECTRIC நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தும் நிகழ்வு சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் தமிழ்நாட்டில் ரூ 1,891 கோடி ($222.5மில்லியன்) முதலீடு மேற்கொள்ளவுள்ளது MITSUBISHI ELECTRIC நிறுவனம். 2,000 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கக் கூடிய வகையில், திருவள்ளூர் பெருவாயலில் அமையவுள்ள Air Conditioner and Compressor Factoryக்கும் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின். நிகழ்வில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விஷ்ணு, மிட்சுபிசி எலக்ட்ரிக் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மிட்சுபிசி எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிக முக்கியமான முதலீடு இது. 100% வெளிநாட்டு முதலீடாக இந்த முதலீடு அமைந்துள்ளது. உலகளவில் முக்கியத்துவம் பெற்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறது என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஆண்டில் நான் அதிகம் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில், தொழில்துறை நிகழ்ச்சிகள்தான் அதிகம். அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்திக்கும்போதெல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை, வேலைவாய்ப்பு குறித்தெல்லாம் கேட்டுக்கொண்டேயிருப்பேன். இந்த நிலையில், வரும் 23 ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்லவிருக்கிறேன். முதலீட்டு குழுவிற்கு தலைமை தாங்கி ஜப்பான் செல்லவுள்ளேன். தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கவுள்ளேன் என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், பெண்களை அதிக அளவில் பயன்படுத்தும் நிறுவனங்களை வரவேற்க இருக்கிறோம். ஜப்பான் நிறுவனங்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதிக அளவு ஜப்பானியர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அந்த உறவை மேலும் வலுப்படுத்த ஜப்பான் நாட்டு முன்னணி தொழில் நிறுவனங்களை சந்தித்து முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்புவிடுக்கவுள்ளேன். அதற்கு, மைல்கல்லாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என கூறினார்.