சென்னை: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி என்று குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி,  பெரும்பாலான முதலீடுகளை ஜோடிக்கப்பட்டவை என விமர்சித்துள்ளார்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை என்றும் கூறி உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் அரசு முறை பயணமாக, தமிழ்நாட்டுக்கு தொழில்முதலீடுகளை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு  சென்றுவிட்டு  இன்று காலை (செப்டம்பர் 8ந்தேதி)  சென்னை திரும்பினார்.  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது,  தனது பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என பெருமிதமாக கூறினார்.

இதை ஜோடிக்கப்பட்ட முதலீடு என பாமக தலைவர் அன்புமணி விமர்சனம் செய்துள்ளார். அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மேற்கொண்ட பயணங்களின் போது, ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

முதலீடுகளின் அளவு மிகக்குறைவு என்பது மட்டுமின்றி, அவற்றில் பெரும்பாலானவை ஜோடிக்கப்பட்டவை ஆகும்.

இயல்பாக வரக்கூடிய சிறிதளவு முதலீடுகளையும், வருவதற்கு வழியில்லாத பெருமளவு முதலீடுகளையும் தாம் ஈர்த்து வந்ததாக முதலமைச்சர் நாடகமாடுவது கண்டிக்கத்தக்கது.  ஜெர்மனியில் திரட்டப்பட்ட ரூ.7020 கோடி முதலீடுகளில் குறைந்தது ரூ.5319 கோடி முதலீடு விரிவாக்கத் திட்டங்களுக்கானவை தான். இங்கிலாந்தில் கையெழுத்திடப்பட்ட ரூ.8496 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் அனைத்துமே விரிவாக்கத் திட்டங்களுக்கானவை தான்.

மொத்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வெளிநாட்டு பயணத்தில் கையெழுத்திடப்பட்ட ரூ.15,516 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்களில் 89 சதவீதம், அதாவது ரூ.13,815 கோடிக்கான முதலீடுகள் விரிவாக்கத் திட்டங்களுக்கானவை. இவற்றை தமிழ்நாட்டில் இருந்தே ஈர்த்திருக்க முடியும். இதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டு இங்கிலாந்துக்கும், ஜெர்மனிக்கு முதலமைச்சர் சென்றிருக்கத் தேவையில்லை.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை. அதை மறைப்பதற்காகத்தான் இத்தகைய நாடகங்களை தி.மு.க. அரசு நடத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.