சென்னை: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் 7 புத்தங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் சார்பில் தயாரிககப்பட்டுள்ள திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.2.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில், நீதிக்கட்சி வரலாறு, தந்தை பெரியார் சிந்தனைத் தொகுப்பு, அறிஞர் அண்ணா சிந்தனைத் தொகுப்பு, திராவிட இயக்க பெண் சிந்தனையாளர்கள் தொகுப்பு, திராவிட இயக்கமும் சமூக பண்பாட்டு பொருளாதார மாற்றங்களும், திராவிட இயக்கச் சிறுகதைகள்-2 தொகுப்புகள் ஆகிய திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை வெளியிட்டார்.
திராவிடக் களஞ்சியம் திட்ட விளக்கம்;
‘திராவிடம்’ என்ற சொல் கடந்த இரு நூற்றாண்டு காலமாக மானிடவியல், மொழியியல், வரலாறு, பண்பாட்டு ஆய்வு ஆகிய களங்களில் தெற்காசியாவில் வாழும் ஒரு மக்கள் இனம், மொழிக் குடும்பம், பண்பாட்டுக் குழுமத்தைச் சுட்டிக் காட்டவும், இக்காலத் தமிழ்நாட்டு மக்களிடையே வளர்ச்சி அடைந்து செல்வாக்குச் செலுத்தும் சமுதாய விடுதலை இயக்கத்தின் கருத்துநிலையைச் சுட்டிக்காட்டுகிறது.
அறிவுத் துறையில், களஞ்சியம் என்ற சொல் ஒரு பொருள் அல்லது பல பொருள் குறித்து பல அறிஞர்களின் எழுத்துகளைத் தொகுப்பாகக் கொண்டிருக்கும் நோக்கு நூல் படைப்பு (a reference work or compendium providing summaries of knowledge either general or special to a particular field or discipline) எனப் பொருள் கூறப்படுகின்றது. ‘திராவிடக் களஞ்சியம்’ என்பது, திராவிடச் சிந்தனை பற்றிய அறிவுக் களஞ்சியத் தொகுப்பு, திராவிட இயக்க ஆக்கங்களின் தொகுப்பு, திராவிடம் பற்றிய ஆய்வுகளின் தொகுப்பும் ஆகும்.

அண்மைக்கால அகழ்வாய்வு முடிவுகள் திராவிடப் பண்பாட்டின் தொன்மை தொடர்ச்சி குறித்து அறிவியல் பூர்வமான முடிவுகளை வழங்கி வரும் நிலையில் திராவிடக் களஞ்சியத் தொகுப்புகள் வெளிவருவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். திராவிடப் பண்பாட்டின் தொன்மை என்பது தமிழ் மொழி வரலாற்றின் தொன்மையுமாகும். இந்த நெடும் வரலாற்றில் பண்பாட்டுப் படையெடுப்புகளையும் எதிர்கொண்டே வந்திருக்கிறது. இதன் தொடர்பில் உருவானதே திராவிட இயக்கம் ஆகும்.
திராவிட இயக்க வளர்ச்சி என்பது நமது முன்னேற்றத்தின் ஒரு அங்கமாகும். இத்தகைய நெடிய திராவிட பண்பாட்டின் வளர்ச்சி குறித்தும் திராவிட இயக்கம் குறித்தும், அனைத்து கருத்துகளையும் மாற்றங்களையும் களஞ்சியமாகத் தொகுத்து ஆவணப்படுத்துவதே திராவிடக் களஞ்சியம் திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திராவிடக் களஞ்சியம் பொதுமக்கள் அறிவுத் தேவையின் பொருட்டுத் தயாரிக்கப்பட வேண்டியுள்ளது. திராவிட இயக்கத்தின் கருத்தியல்கள், படைப்பு வளம் குறித்த ஆய்வுகளில் வல்லமை பெற்ற வல்லுநர்கள் குழுவைக் கொண்டு இந்த பணி கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வருகிறது.
அந்த வகையில், 13 திரட்டுகளாகத் திட்டமிட்டுள்ள இப்பணியில் முதற்கட்டமாக, நூலாசிரியர் க. திருநாவுக்கரசு அவர்களின் நீதிக்கட்சி வரலாறு, பதிப்பாசிரியர்கள் – புனிதப் பாண்டியனின் தந்தை பெரியார் சிந்தனைத் தொகுப்பு, வீ. எம். எஸ். சுபகுணராஜனின் அறிஞர் அண்ணா சிந்தனைத் தொகுப்பு, முனைவர் எஸ். ஆனந்தியின் திராவிட இயக்க பெண் சிந்தனையாளர்கள் தொகுப்பு, பேரா. சுப. வீரபாண்டியனின் திராவிட இயக்கமும் சமூக பண்பாட்டு பொருளாதார மாற்றங்களும், பேரா. ந. இளங்கோவின் திராவிட இயக்கச் சிறுகதைகள், பேரா. ஹாஜாகனின் திராவிட இயக்கக் கவிதைகள் ஆகிய 7 தொகுப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, பள்ளிக்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி. சந்திரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மரு. மா. ஆர்த்தி, திராவிடக் களஞ்சியத்தின் பொது பதிப்பாசிரியர் மூ. அப்பணசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
[youtube-feed feed=1]