சென்னை: சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிகளுக்கு 1370 மேசை கணினிகளை (Desktop Computers) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணாக்கர்கள் முன்னிலையில் வழங்கினார்.

தமிழக  தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 1370 புத்தாக்கம் செய்யப்பட்ட மேசை கணினி களை சென்னை பெருநகர மாநகராட்சியின் 70 பள்ளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக, 6 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 1370 புத்தாக்கம் செய்யப்பட்ட மேசை கணினிகளை சென்னை பெருநகர மாநகராட்சியின்70 பள்ளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக, 6 பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மேசை கணினிகளை வழங்கினார். தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைத்துள்ளது.

இதன்மூலம், ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளிக்கும் 10 மேசைக் கணினிகளும், ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிக்கும் 20 மேசைக் கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன. இன்ஃபோசிஸ் நிறுவனத்தால் தற்போது வழங்கப்பட்டுள்ள 1370 மேசை கணினிகள் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்படுவதால், 28,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள். மேற்படி பள்ளிகளுக்கு கணினிகள் வழங்குவதன் மூலம் மாணவர்களின் கல்வித்தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், “கற்பித்தல் – கற்றல்” என்ற சூழலை ஏற்படுத்தி, சுயமாகக் கற்றல் குறித்த எண்ணத்தை பேணிவளர்க்கும்.

மேலும், மாநிலத்தில் மின்னாளுமை மற்றும் டிஜிட்டல் இணைப்புகளை மேம்படுத்தும் வகையில், கடந்த சில மாதங்களில் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறையால், சில கொள்கைகள் வெளியிடப்பட்டன – தரவுகளுக்கான தரநிலையை உறுதி செய்திட, 20.01.2022 நாளிட்ட அரசாணையில் வெளியிடப்பட்ட Reference Standards எனும் குறிப்பு தரநிலைகள் கையேடு, 25.01.2022 நாளிட்ட அரசாணையில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு தொலைத்தொடர்பு உட்கட்டமைப்புக் கொள்கை -2022 (Tamil Nadu Telecom Infrastructure Policy-2022), 10.03.2022 நாளிட்ட அரசாணையில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு தரவுக் கொள்கை – 2022 (Tamil Nadu Data Policy-2022) ஆகியவை ஆகும்.

இவை தமிழ்நாடு மாநில வலைதளத்தில் (www.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இக்கொள்கைகள் ஒத்திசைந்த முறையில் மின்னாளுமைப் பயன்பாடுகளைப் பயன்படுத்துவதற்கும், பாதுகாப்பான முறையில் தனியார் மூலம் செயலிகளை உருவாக்க அனுமதிப்பதற்கும், பொது நன்மைக்காக தரவுகளைப் பயன்படுத்த அனுமதிக்கவும் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பினை விரைந்து செயல்படுத்தவும் உதவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.