தென்காசி மாவட்டம் புளியரை கிராமத்தைச் சேர்ந்த சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதிக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக-கேரள எல்லைப் பகுதியான புளியரை கிராம பகுதியில் நேற்று முன்தினம் (25-2-2024) நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கீழே செங்கோட்டை – கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த ண்முகையா – வடக்குத்தியாள் தம்பதி தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு செங்கோட்டையில் இருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த சிறப்பு ரயில் சத்தத்தைக் கேட்டு பதற்றமடைந்தனர்.

முதிய வயதிலும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து, ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தடுத்துள்ளனர்.

இதனையடுத்து செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் இருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. தவிர, காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தரப்பட்டு விரைந்து வந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர்.

தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீர செயலை பாராட்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.