சென்னை: சாலை விபத்தில் மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் முதல்வர்  அறிவித்து உள்ளார்.

இன்று தொடங்கும் 83-ஆவது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக, தமிழகத்தை சேர்ந்த விஷ்வா தீனதயாளன் மற்றும் 3 வீர‌ர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில்  விஷ்வா உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த இளம் வீரரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன்,  ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட செய்திகுறிப்பில், தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் நேற்று மேகாலயா மாநிலத்தில் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் சென்றபோது, அங்கு சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன். எதிர்காலத்தில் எத்தனையோ உலக சாதனைகளைப் படைப்பார் என்று நாம் எண்ணியிருந்த நிலையில், மிகவும் வருந்தத்தக்க வகையில் அவர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இது அவரது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எத்தகைய துயரத்தை அளித்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். விஷ்வா தீனதயாளன் அவர்களுடைய குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 இலட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்