புதுடெல்லி:

பதவியை விட்டு வெளியேறுங்கள். குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி காட்டுகிறோம் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் சவால் விடுத்துள்ளார்.


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கனவுத் திட்டமான குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை செயல்படுத்த முடியாது என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள முன்னாள் நிதி அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம், ஏற்கெனவே இதுபோன்று நிறைவேற்ற முடியாது என்று சொன்ன திட்டங்களை எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றிக் காட்டினோம்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், ஆனால், குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம் என்ற பணமதிப்பு நடவடிக்கையை ஏழைகளுக்காக கொண்டு வந்துள்ளோம்.

ஏழைகளின் குடும்பங்களுக்கு இன்று பொருளதார பாதுகாப்பு கிடையாது. வங்கியில் நேரடியாக பணத்தை செலுத்தும் திட்டத்தில் 25 கோடி பேர் பயனடைவார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமலால் 50 ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் 5 லட்சம் பேர் வேலையிழந்தனர்.

மூடப்பட்ட நிறுவனங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை செயல்படுத்த முடியாது என்கிறார் அருண்ஜெட்லி. உங்களால் முடியாவிட்டால் வெளியேறுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்.