ராய்ப்பூர்: மத உணர்வுகளை புண்படுத்தியதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின்  இந்திய இயக்குநர் அங்கி தாஸ்  மீது சத்திஸ்கர் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டெல்லி காவல்துறையின் சைபர் செல்லில், திவாரி என்பவர் கொடுத்த புகாரின் பேரில்,  மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், மக்களைத் தூண்டிவிட்டதாகவும்  கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சத்திஸ்கர் மாநில அரசு முதல்வர் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு  செய்துள்ளது.

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன. சமீபத்தில்,  அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிகையில், ஃபேஸ்புக் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்ட கட்டுரை ஒன்ற வெளியானது. அதில், ஃபேஸ்புக் நிறுவனம்,  வெறுப்பு பேச்சுகளை கண்டுகொள்ளவில்லை என்றும், இந்தியா ஆட்சியை செய்து வரும்  பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பாஜக  தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் சர்ச்சைக்குரிய  வெற்று பேச்சு மற்றும் ஆட்சோபனைக்குரிய கருத்துகளை கண்டுகொள்வதில்லை எனவும், இதற்கு பின்னணியில்,  ஃபேஸ்புக் இந்திய இயக்குநர் அங்கி தாஸ் இருப்பதாகவும்  கூறியிருந்தது.

இந்த விவகாரம் சர்ச்சைக்குரியாகி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல் காந்தி, தனது டிவிட்டர், “மிகவும் கஷ்டங்களுக்குப் பின்னர் நாம் பெற்ற ஜனநாயகத்தை ஒரு பக்க சார்பு, போலி செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சின் மூலம் இழக்க கூடாது. போலி மற்றும் வெறுப்புப் பேச்சுகளை ஃபேஸ்புக் வலிந்து அனுமதித்தது குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்து அனைத்து இந்தியர்களும் கேள்வி எழுப்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம்  நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்,  அவிஷ் திவாரி என்ற பத்திரிகையாளர்,  அங்கி தாஸ் தனக்கு மிரட்டல் விடுப்பதாக  ராய்ப்பூரில் புகார் அளித்துள்ளார். அதுபோல அங்கிதா தாஸ்,  தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, 5  பேர் மீது புகார் அளித்திருந்தார். தனது பதிவுக்கு பிறகு வாட்ஸ்அப்பில் தனக்கு மிரட்டல் அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்த வண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அதற்கான ஸ்கிரின்சாட் ஆதாரங்களையும் அவர் காவல் நிலையத்தில் சமர்பித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அங்கிதாதாஸ் மீது சத்திஸ்கர் மாநில காவல்துறை  வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும,  சத்தீஸ்கரைச் சேர்ந்த ராம் சாஹு மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவேக் சின்ஹா ஆகியோரின் பெயரும் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், பேஸ்புக் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

 முகநூலில், யார்  பேசினாலும், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது கட்சி தொடர்பையோ பொருட்படுத்தாமல், முகநூல் அதன் கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது.

தங்களின் கவனத்துக்கு வரும் வன்முறையை தூண்டும் மற்றும் வெறுக்கத்தக்க வகையிலான பேச்சுகளுக்கு நாங்கள் தடை விதிக்கிறோம். யாருடைய அரசியல் நிலைப்பாடு அல்லது கட்சி தொடர்பையும் பொருட்படுத்தாமல் உலகளவில் இந்த கொள்கைகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என தெரிவித்து உள்ளது.