சென்னை: ஆயுதப்படையில் பணிபுரிந்த 400 காவலர்கள் சென்னை நகரில் உள்ள அந்தந்த மண்டலங்களுக்கு மாற்றி காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னை நகர காவல் ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவலர்களை தாலுகா (சட்டம், ஒழுங்கு) காவல் நிலையத்திற்கு பணியிடம் மாற்றம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.

ஆயுதப்படையிலிருந்து தாலுகா காவல் நிலையத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்ட காவலர்கள் தற்போது வசித்து வரும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பினை உடனடியாக காலி செய்யும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஆயுதப்படை துணைக்கமிஷனர் ஆயுதப்படை காவலர்களை உடனடியாக பணியிட மாறுதலில் விடுவித்து தாலுகா காவல் பிரிவுக்கு சம்மந்தப்பட்ட இணைக்கமிஷனர்களிடம் அறிக்கை செய்ய அறிவுறுத்த வேண்டும்.

சென்னை நகர சட்டம், ஒழுங்கு தெற்கு, மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மண்டல இணைக்கமிஷனர்கள் காவல் ஆணையர்கள் பணியிட மாறுதலில் தாலுகா காவல் பிரிவுக்கு அறிக்கை செய்த நாளினை கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பணியிடமாறுதல் செய்யப்பட்ட காவலர்கள் தங்கள் பணியிட மாற்றத்தை ரத்து செய்யவோ அல்லது வேறு தாலுகா காவல் நிலையத்திற்கு மாறுதல் வேண்டியோ ஓர் ஆண்டு வரை கோரி மனு சமர்ப்பிக்கவோ கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆணையரின் உத்தரவின் அடிப்படையில், ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த 400 காவலர்கள் சென்னை நகரில் உள்ள அந்தந்த மண்டலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]