சென்னை:
மே மாதம் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் வளாகக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான மறு தேர்வு மே 3-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்திருந்த நிலையில், அந்த தேர்வுகள் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதேபோல் மே 17-ம் தேதி முதல் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணிகள் முடிவடையாததால், தேர்வுகள் திட்டமிட்டபடி தொடங்காது என்று சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், மே 10-ம் தேதி முதல் தொடங்கவிருந்த இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை ஐ.ஐ.டி.யும் அறிவித்துள்ளது.

ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு என்று நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளை கொரோனா பரவலை காரணம் காட்டி அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., ஆகியவை ஒத்திவைத்துள்ளன.