சென்னை: 
மிழகத்தில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான நீர்நிலைகளின் எண்ணிக்கை, வெளியேற்றப்பட்ட எண்ணிக்கை மற்றும் ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை ஆகியவற்றைப் பட்டியலிட்டு டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமைச் செயலாளருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை செய்வது மட்டுமல்லாமல், வீடுகள், நிறுவனங்கள் போன்றவற்றைக் கட்டிக் கொள்கின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இனி ஆக்கிரமிப்புகள் அனுமதிக்கப்படாது எனத் தெரிவித்தார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீர்நிலைகளிலேயே குப்பைக் கிடங்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அரசு அலுவலகம், காவல்நிலையம் ஆகியவற்றை அமைத்தும் அரசு ஆக்கிரமித்துள்ளது எனத் தெரிவித்தனர்.
இதை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, தமிழகத்தில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான நீர்நிலைகளின் எண்ணிக்கை, வெளியேற்றப்பட்ட எண்ணிக்கை மற்றும் ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை ஆகியவற்றைப் பட்டியலிட்டு டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டது. ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், தலைமைச் செயலரை ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று தெரிவித்துள்ளது.