சென்னை

புகையிலை பொருளான ஹான்ஸுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.பச்சாவட் என்ற வணிக நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்களது நிறுவனம் ஹான்ஸ் என்ற புகையிலை பொருளை இறக்குமதி செய்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் விற்பனை செய்கிறது.  நாங்கள் இதற்கு உரிய வரி செலுத்தப்பட்டு வருகிறோம்.

ஆயினும்  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹான்ஸ் தடை செய்யப்பட்ட பொருள் என்று கூறி பறிமுதல் செய்து அழித்து வருகிறார்கள்.  இவ்வாறு பறிமுதல் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு விற்பனை செய்வது சட்டப்பூர்வமானது என்பதால் உணவு பாதுகாப்பு சட்டம் இதற்குப் பொருந்தாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.   அரசு தரப்பு வழக்கறிஞர், ஹான்ஸ் புகையிலையில் 1.8 சதவீதம் நிகோடின் கலந்துள்ளதால் பொதுமக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருளாகும்.. புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது” என்று தெரிவித்தார்.

நீதிபதி, ”மக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை தடை செய்வதற்கு அரசு அதிகாரம் இருந்தாலும் தடை விதிக்கும் முன்பு உரிய மதிப்பீடு மற்றும் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தொழில் அல்லது வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான உரிமை ஒரு அடிப்படை உரிமையாக இருந்தாலும், அந்த உரிமையானது அரசால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.

மேலும் பொது சுகாதாரம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால், குடிமகனின் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க அரசு கடமைப்பட்டுள்ளது. எனவே எந்தவொரு புகையிலை தயாரிப்பு பொதுச் சுகாதாரத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டால் அரசு தடை விதிப்பது நியாயமானது என்பதால் ஹான்ஸ்க்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.