சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் திருமண தகவல் இணைய தளங்களை ஒழுக்கு படுத்தும் விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் பெண் மருத்துவரைத் திருமணம் செய்வதாகக் கூறி 80 சவரன் நகை, ரூ.68 லட்சம் மோசடி செய்ததாக சக்கரவர்த்தி என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்ஹ்டில் சக்கரவர்த்தி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இன்று இந்த மனு  நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தபோது பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  சக்கரவர்த்தி இதே போன்று 17-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், இதனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் கோரி பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி இதனைப் பதிவு செய்து கொண்டு, சக்கரவர்த்தியின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில் திருமண தகவல் இணையதள மோசடிகளில் பெரும்பாலும் பெண்களே ஏமாற்றப்படுவதாகவும், இதுபோன்ற இணையதளங்களைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு சட்டமோ, விதிகளோ உருவாக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் திருமண இணையதளங்களில் பதிவு செய்வோர் பாஸ்போர்ட், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற விதி இருந்திருந்தால் இது போன்ற மோசடிகள் தடுக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்ட நீதிபதி, திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.