சென்னை

டிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் மதுரை சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் வாங்கியிருந்தார். கடனை லைக்கா நிறுவனம் திருப்பிக்கொடுத்து அதற்குப் பதில், பணத்தைத் திருப்பித்தரும் வரை, விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தது.

விஷால் இந்த ஒப்பந்தத்தை மீறி, தான் தயாரித்த வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தை லைக்கா நிறுவனத்துக்கு வழங்காததால், அவருக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி, ‘விஷால் ரூ.15 கோடியை உயர்நீதிமன்றத்துக் கணக்கில் செலுத்த வேண்டும். அவரது சொத்து கணக்கையும், வங்கி கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது மட்டுமல்லாமல், ரூ.15 கோடி டெபாசிட் செலுத்தாவிட்டால், தனி நீதிபதி முன்பு உள்ள வழக்கு விசாரணை முடியும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை வெளியிட இடைக்காலத் தடையும் விதித்தது.

இந்த வழக்கு கடந்த 19-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் விவரங்கள் தாக்கல் செய்யவில்லை. வழக்குரைஞர்களும் ஆஜராகவில்லை. இதையொட்டி விஷாலை நேரில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார் .ஆனால் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது விஷால் நேரில் ஆஜராகி இருந்தார்.

எனவே, ”19-ந் தேதிக்குள் சொத்து ஆவணங்கள், வங்கிக் கணக்குகளைத் தாக்கல் செய்யாததால், விஷால் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடாது? இந்த உயர்நீதிமன்றத்தை விட பெரிய ஆள் என விஷால் எண்ண வேண்டாம். உயர்நீதிமன்றம் அனைவரையும் போலத்தான் விஷாலையும் கருதும். உயர்நீதிமன்றத்துக்கு முன்பு அனைவரும் சமம்தான்’ என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார்

மேலும் நீதிபதி, ‘விஷால் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த உயர்நீதிமன்றம் மீதான மரியாதையை நானே தாழ்த்திவிட்டதாகிவிடும்’ என்றும் கூறி உள்ளார்,