சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அறிவுறுத்தி உள்ளது.

கடந்த 2014 ஆம் வருடம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பரசு அரசு சின்னத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக வழக்கு தொடரப்பட்டது.   இந்த வழக்கை திரைப்பட ஃபைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.   தற்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முகுந்த் போத்ரா இருவரும் உயிருடன் இல்லை.

ஆயினும் இந்த வழக்கை முகுந்த் போத்ராவின் மகன் தொடர்ந்து நடத்தி வருகிறார்.  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் முன்பு இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.   அவர் இந்த வழக்கில் டிஜிபியை இணைத்தார்.   இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடந்தது.

அப்போது நீதிபதி சுப்ரமணியம், “அரசு சின்னங்களை அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் பயன்படுத்தலாம்.  ஆனால் முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் எம்.பி.க்கள் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். முன்பு பதவி வகித்தவர்கள் இப்போதும் அரசு சின்னங்களைப் பயன்படுத்தினால் அவர்கள் செல்லும் வாகனங்களை காவல்துறையால் எப்படி நிறுத்த முடியும்?

எனவே இது போன்ற செயல்பாடுகளுக்குச்  சாதாரண கான்ஸ்டபிள் கூட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை எப்படி அமல்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனையை  டி.ஜி.பிமற்றும் மாநகர காவல்துறை ஆணையர் வழங்க வேண்டும்.” என உத்தரவிட்டுள்ளார்.  இந்த வழக்கு விசாரணை ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.