சென்னை

த்திய அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாகக் கட்டுரை வெளியிட்ட நீயூயார்க் டைம்ஸ் இதழுக்கு சென்னை வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

இந்தியாவில் பெகாசஸ் மூலம் மத்திய அரசு முக்கிய  புள்ளிகள் செல்போனை ஒட்டுக்கேட்ட்டதாக கூறப்படும் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகாரமாக வளர்ந்து வருகிறது.   இதையொட்டி அமெரிக்கப்  பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் கடந்த 28 ஆம் தேதி அன்று ”உலகின் அதி சக்தி வாய்ந்த சைபர் ஆயுதத்துக்கான போர்” என்னும் தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

இந்த கட்டுரையில் இஸ்ரேல் உடனான 2 பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாகக் கடந்த 2017 ஆம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை இந்தியா வாங்கி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.   தற்போது இந்தியாவில் நாடாளுமன்றத் தொடர் நடைபெற்று வருகிறது.    இந்த கட்டுரை இந்நேரம் வெளியானது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.   நாடாளுமன்றத்தில் இந்த கட்டுரையால் கடும் அமளி நிலவுகிறது..

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம் சீனிவாசன் என்பவர் இது குறித்து நீயூயார்க் டைம்ஸ் நிற்வாகத்துக்கு ஒரு நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.  அந்த நோட்டிஸில் அவர்,

“கடந்த 28 ஆம் தேதி தங்களது நாளிதழில் வெளியான புலனாய்வுக் கட்டுரையை இஸ்ரேல் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.  எனவே எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இக்கட்டுரை உலகநாடுகள் மத்தியில் மிகப்பெரிய ஜனநாயக நாடாகத் திகழ்ந்து வரும் இந்தியாவின் நற்பெயரை சீர்குலைத்து, அவப்பெயரை உருவாக்கும் விதமாக திட்டமிட்டு உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. ஆதாரமற்றவை. எனவே இக்கட்டுரையை வெளியிட்டதற்காக ’நியூயார்க் டைம்ஸ்’ நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ. 100 கோடி இழப்பீடு கோரி சட்டரீதியாக வழக்குத் தொடரப்படும்,”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது..