சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் அதிக கட்டணம் வசூலிக்கும்  பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன இந்த வழக்குகள் மீது தலைமை நீதிபதி கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது.

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை என்றும், அபராதம் மட்டுமே விதிக்கப்படுவதாகவும், தனியார் பேருந்துகள் தொடர்ந்து அதிக கட்டணம் வசூலித்து வருவதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபடுவதாகவும், விதிகளை மீறும் பேருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ,

”அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது. மேலும் அபராதம் விதிப்பதால் மட்டும் எந்த தீர்வும் ஏற்படப்போவதில்லை .

தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அடிக்கடி சோதனைகள் நடத்தப்பட வேண்டும்,  தொடர் குற்றத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை இடைநீக்கம் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

எனப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.