மராவதி

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் குறைந்த விலையில் தரமான் மதுபானம் வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்துள்ளார்.

வரும் மே 13 ஆம் தேதி ஆந்திராவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால் வாக்காளர்களைக் கவர வினோதமான வாக்குறுதிகளை இரு கட்சிகளும் வாரி வழங்கி வருகிறது.

அவற்றில் ஒன்றாக மலிவு விலையில் தரமான மது வழங்குவோம் என்ற வாக்குறுதியும் வெளியாகியுள்ளது. இதை முன்வைத்து தெலுங்கு தேசம் கட்சி பிரசாரம் செய்து வருகிறது. நீண்டகாலமாக மதுபானங்களின் தரம் மற்றும் அதிக விலை ஆகியவற்றை முன்வைத்து, ஆளும் அரசுக்கு எதிராக, தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டி வந்தது. தற்போது மதுபான விவகாரத்தையும் தெலுங்கு தேசம் கட்சி கையில் எடுத்து இருக்கிறது.

சந்திரபாபு நாயுடு இது குறித்து,

”கடந்த 2019 சட்டசபைத் தேர்த்லில் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவேன் என்று வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி, ஆட்சியில் அமர்ந்ததும் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டார். தற்போது அனைத்துப் பொருட்களின் விலையும் அபரிமிதமாக உயர்ந்துள்ளது போல உழைக்கும் மக்கள் விரும்பக்கூடிய மதுபானங்களும் விலை உயர்ந்துள்ளது..

ஆளும் கட்சியினர் சாமானிய மக்களுக்கான விலையில் இருந்த மதுவை, சிறிது சிறிதாக ஏற்றி, அவர்களுக்குக் கட்டுப்படியாகாத விலைக்குக் கொண்டு சென்று விட்டார்கள். இவ்வாறு விலையை உயர்த்தியவர்கள் அதற்கேற்றவாறு தரத்தையாவது உயர்த்தி இருக்கலாம். ஆனால் அதிக லாபத்துக்காகத் தரமற்ற மதுவை விநியோகித்து நம் மக்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறார்கள் .

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்கும்போது தரமானது மட்டுமன்றி, விலை குறைவாகவும் மதுபானத்தை அளிக்கவும் நாங்கள் உறுதியளிக்கிறோம்”

என்று கூறியுள்ளார்.