சென்னை: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில்  இன்று  மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி. நெல்லை, குமரி, மயிலாடுதுறை, தேனி, தென்காசி மாவட்டங்களிள் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, சனிக்கிழமை நள்ளிரவு மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள் முதல் சனிக்கிழமை (அக்.23 முதல் 28) வரை ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில், அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழையானது பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதன்படி,  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் லேசான மழையானது மயிலாடுதுறை, தேனி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களிலும், காரைக்காலின் ஒரு சில பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.