டெல்லி: கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50ஆயிரம் இழப்பீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை 4,46,050  பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் கொரோனா  உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக  உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகள் 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர்கள் ரீபக் கன்சல் மற்றும் கவுரவ் குமார் பன்சால் என இருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்த வழக்கின் கடந்த விசாரணைகளைத் தொடர்ந்து, ஜூன் 30ம் தேதி அன்று, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை 6 வாரங்களுக்குள் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் வகுக்க வேண்டும் மற்றும் அதனை உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என கூறி வழக்கை ஒத்தி வைத்தது.

இதையடுத்து வழக்கு இன்றுமீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய தரப்பில் பிரம்மான பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில்,  கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதுமட்டுல்லாமல், கொரோனா பேரிடரை கையாளும் பணியின் போதும், நிவாரண பணிகளின் போதும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் இந்த இழப்பீடு தொகையை அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டு தொகை மாநிலங்கள் சார்பில், மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தால் வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது.