டெல்லி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சார செலவை 10 சதவீதம் மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் வேட்பாளர்களின் பிரச்சார செலவுத் தொகையை உயர்த்த மத்திய அரசு அனுமதி தந்து இருக்கிறது. பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சார செலவின வரம்பை அதிகரிக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில் தேர்தல் ஆணைய பரிந்துரைப்படி வேட்பாளர் செலவினத்தை 10 சதவிகிதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதற்காக மத்திய சட்டத்துறை அமைச்சகமானது 1961 தேர்தல் சட்ட விதி முறையில் மாற்றம் செய்துள்ளது.
அதன்படி லோக்சபா தேர்தலில் தற்போது ரூ.70 லட்சமாக இருக்கும் செலவுத் தொகை ரூ.77 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட செலவு தொகையானது, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். தமிழகத்தில் வேட்பாளர் செலவின வரம்பு சட்டசபை தேர்தலுக்கு ரூ.30.80 லட்சமும், லோக்சபா தேர்தலுக்கு ரூ.77 லட்சமாகவும் உயருகிறது.