கமதாபாத்

குஜராத் மத்திய பல்கலைக் கழக மாணவர்களுக்கு படிப்பை முடித்து வருடக்கணக்காகியும் பட்ட சான்றிதழ் வழங்கப்படவில்லை.

கடந்த 2009 ஆம் வருடம் குஜராத் மத்தியப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது.   அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்வி பயின்று கடந்த 2012 முதல் மாணவர்கள் பட்டதாரி ஆகி உள்ளனர்.   இது வரை சுமார் 1500க்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டதாரி ஆகி உள்ளனர்.   அத்துடன் பட்டமேற்படிப்பும் இந்த பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப் படுகிறது.

ஆனால் படிப்பை முடித்த மாணவர்களுக்கு இதுவரை பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழஙக்ப்படவில்லை.   மேலும் இதுவரை இந்த பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவும் நடைபெறவே இல்லை.    இதனால் இங்கு பயின்றுள்ள மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.   புரொவிஷனல் சர்டிபிகேட் எனப்படும்  தற்காலிக சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் தங்களின் ஒரிஜினல் சர்டிபிகேட் கோரி பலமுறை விண்ணப்பித்தும் பயன் ஏதும் இல்லை.

இது குறித்து மாணவர் பிரதிநிதிகளிடம் பல்கலைக்கழக பிரதிநிதிகள் இந்த பட்டப்படிப்புக்கான சான்றிதழின் வடிவமைப்பு (DESIGN) இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும்  பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பாளர்கள் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.    இது மாணவர்களின் கோபத்தை அதிகப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் உள்ள மற்றப் பல்கலைக்கழகங்களிலோ அல்லது வெளிநாட்டிலோ மேற்படிப்பை தொடர முடியாமல் இங்கு பயின்ற மாணவர்கள் பெரும் துயருக்கு ஆளாகி உள்ளனர்.   அத்துடன் வேலை வாய்ப்புக்கு நேர்முகத் தேர்வுக்கு செல்வோரும் இங்கு தாங்கள் பயின்றதற்கான சான்றிதழ்களையும், மதிப்பெண் சான்றிதழ்களையும் மட்டுமே காட்டி வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்கள் பலகலைக்கழக துணை வேந்தர் பாரியிடம் கேள்வி எழுப்பினர்.  அவர், “நாங்கள் பலருக்கு ஏற்கனவே பட்டப் படிப்பு சான்றிதழ் வழங்கி உள்ளோம்.   கடந்த 2014 முதல் மதிப்பெண் சான்றிதழை சிலருக்கு தர முடியாததால் அவர்களுக்கு மட்டும் பட்டப் படிப்பு சான்றிதழ் வழங்க உள்ளது.    பட்டமளிப்பு விழாவுக்கான உத்தரவு தற்போது தான் நடைமுறைக்கு வந்துள்ளது.  விரைவில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது”  எனக் கூரி உள்ளார்.

இதுவரை எத்தனை மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது என அவர் தெரிவிக்கவில்லை.    மாணவர்கள்  அவர் அளிக்கும் தகவல்கள் பொய்யான தகவல்கள் எனக் கூறுகின்றனர்.