டில்லி

க்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலுவைப் பேச விடாமல் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குறுக்கிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.  இந்த கனமழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதி வழங்கவில்லை என்று தமிழக அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று கேள்வி நேரத்தில் தமிழகத்துக்குப் பேரிடர் நிவாரணம் நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர். டி.ஆர். பாலு குற்றஞ்சாட்டி இது தொடர்பாக மக்களவையில்  கேள்வி எழுப்பினார். மத்திய உள்துறை இணை அமைச்சர்  நித்யானந்த் ராய் அவரது கேள்விக்குப் பதில் அளித்தார்.

டி ஆர் பாலு வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணம் தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நாடாளுமன்ற உறுப்பினர். டி.ஆர். பாலுவின் பேச்சுக்கு இடையூறு அளிக்கும் வகையில் பேசினார்.

ஆத்திரமடைந்த டி.ஆர். பாலு,

“நீங்கள் என்ன பேசுகிறீர்கள்.  ஏன் குறுக்கிடுகிறீர்கள்? தயவு செய்து அமருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்? சபாநாயகர் தான் குறுக்கிட வேண்டும். இந்த அமைச்சர் ஏன் குறுக்கீடு செய்கிறார். சில ஒழுக்க நெறிகளை அமைச்சர் தெரிந்திருக்க வேண்டும். 

நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க நீங்கள் தகுதியற்றவர். தயவு செய்து அமருங்கள். மத்திய இணை அமைச்சராக இருக்கத் தகுதியற்ற உங்களுக்கு விவாதத்தில் பங்கேற்கத் தைரியம் இல்லை தயவு செய்து அமருங்கள்”

என்றார்.

மத்திய இணை அமைச்சரைத் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர். டி.ஆர். பாலு அவமதித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தி.மு.க. , பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளியேறினர்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர். டி.ஆர். பாலு,

“மக்களவையில் பட்டியலின அமைச்சரை  அவமதித்துவிட்டதாக பா.ஜ.க.வினர் சித்தரித்துப் பேசுகின்றனர். மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. வெள்ள பாதிப்பு, நிவாரண நிதி குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினேன்.

என்னைக் கேள்வி கேட்க விடாமல் மத்திய இணை அமைச்சர்  எல்.முருகன் குறுக்கிட்டார். ஒரு தமிழர் என்ற முறையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செயல்படவில்லை'”

என்று தெரிவித்துள்ளார்.

டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதோடு, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையொட்டி, டி.ஆர். பாலுவின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாகச் சபாநாயகர் அறிவித்தார்.