டில்லி

சீன நாட்டு செயலிகளான விசாட், வைபோ போன்றவைகளை உபயோகிக்க வேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் மொபைல் மூலம் விசாட், வைபோ போன்ற பல செயலிகள் மொபைல் உபயோகிப்பாளர்களால் டவுன் லோடு செய்யப்பட்டுள்ளது. இந்த செயலிகளின் மூலம் பல ரகசியங்களை சீன நாட்டில் உள்ள இணையக் குற்றவாளிகள் திருடுவதாக தகவல்கள் வந்துள்ளன.  இது போல ஏற்கனவே சில அரசுத் தகவல்கள் வெளியே கசிந்ததற்கு இந்த இணையத் திருட்டே காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “சமீபத்தில் கிடைத்துள்ள தகவலின் படி ஆண்டிராய்ட் மற்றும் ஐ ஃபோன்களின் டவுன்லோடு செய்யப்பட்ட சீன நாட்டு செயலிகளின் மூலம் பல தகவல்கள் திருடப்படுவதாக தெரிய வந்துள்ளது.  இந்த செயலிகளை ராணுவத்தை சேர்ந்தவர்கள் யாரும் உபயோகப்படுத்த வேண்டாம்.  அத்துடன் அதிகாரிகள் தங்களின் கீழ் பணி புரிபவர்களை உடனடியாக இந்த செயலிகளை அன் இன்ஸ்டால் செய்யச் சொல்ல வேண்டும்.

ஏற்கனவே பலமுறை இது போல அரசுத் தகவல்களும், மக்களின் சொந்தத் தகவல்களும் திருடப்பட்டிருக்கலாம் என அஞ்சப் படுகிறது.  உதாரணமாக கடந்த 2012 ஆம் வருடம் அப்போதைய பிரதமரின் பாங்காக் பயண திட்டம் அரசு அறிவிக்கும் முன்னரே வெளி வந்ததும் இது போல ஒரு தகவல் திருட்டின் காரணமே.  எனவே இதை அரசுத் துறை மட்டுமின்றி பொதுமக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.   இது போன்ற செயலிகளை பயன்படுத்தும் பொதுமக்களும் கவனமாக இருக்க வேண்டும்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.