டில்லி

கடந்த சில நாட்களாக அரசி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மத்திய அரசு பாரத் அரிசி விற்பனையைத் தொடங்கி உள்ளது. 

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் அரிசி விலை உயர்ந்து வருகிறது. அரிசி விலை கடந்த ஓராண்டில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆகவே அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக, மலிவு விலையில் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து அதற்கு ‘பாரத் அரிசி’ என்று பெயரிட்டது.

நேற்று டில்லியில் ‘பாரத் அரிசி’ அறிமுக விழா நடந்தது. மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகப்படுத்தினார். மேலும் பாரத் அரிசி விற்பனைக்காக பயன்படுத்தப்படும் 100 வாகனங்களை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பாரத் அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளில் கிடைக்கும். இதற்குக் கிலோ ரூ.29 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், 5 பயனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசி பைகளை வழங்கினார்.

அப்போது பியூஷ் கோயல்,

“மத்திய அரசு மொத்த விலையைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் பெரும்பாலான மக்களுக்குப் பலன் அளிக்கவில்லை. ஆகவே, சில்லறை சந்தையில் விற்பனையை தொடங்கி உள்ளோம்.  பாரத் அரிசி, நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பலன் அளிக்கும். 

அரசு ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில் கோதுமை விற்பனையைத் தொடங்கிய பிறகு கோதுமை விலை குறைந்து விட்டது. அதை போஅ பாரத் அரிசியும் அரிசி விலை குறைவுக்கு வழி வகுக்கும். ஏற்கனவே நான் ‘பாரத் ஆட்டா’, ‘பாரத் பருப்பு’ பயன்படுத்தி இருக்கிறேன்.. இனி, பாரத் அரிசியையும் பயன்படுத்துவேன்” 

என்று தெரிவித்துள்ளார்.